

சென்னை,
கரூரில் இன்று பேசிய முதல்-அமைச்சர் விஜய், "கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு எங்க இருக்காருனே தெரியல... ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்காரு.." என்று வேட்டைக்காரன் பட பாடலை பாடி செந்தில் பாலாஜியை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சருக்கு பதிலடி தெரிவித்து செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலினும், அன்றைய தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு... இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.