2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்..? - மாணிக்கம் தாகூர் பதில்

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்..? - மாணிக்கம் தாகூர் பதில்
Published on

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்பதை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார்

கூட்டணி கட்சிகள்

சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்கு இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில்

இதனிடையே தவெக தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1-ந்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தவெகவின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டது. கூட்டணி தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

புதிய கட்சிகள்

இந்நிலையில் தவெக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரிடம் “2029 நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “2029 நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்பதை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டத்தில் செயல் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம். இந்த கூட்டணி ஒரு பலமான கூட்டணி.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் தற்போது 4 கட்சிகள் உள்ளன. புதிய கட்சிகள் வருவதற்கான அடுத்த நகர்வுகள் எடுக்கப்படும்” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com