

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த கேகே சர்வே மற்றும் யுக்திகள் என்ற தனியார் நிறுவனத்தின் அங்கமான பாராவீல் தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் தமிழகத்தில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளதாகவும், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் தலா 30 ஆயிரம் வாக்காளர்களிடம் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 70 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களிடமிருந்து கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளதாகவும் பாராவீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாராவீல் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு விவரம்:-
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலில்,
* திமுக கூட்டணி 41.5 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பெறும்
* அதிமுக கூட்டணி 36.2 சதவீத வாக்குகள் பெற்று 2வது இடம் பெறும்.
* தவெக 13.6 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடம்பெறும்.
* நாம் தமிழர் 7.9 சதவீத வாக்குகள் பெற்று 4வது இடம்பெறும்.
சென்னையில் உள்ள தொகுதிகளில் தவெக கணிசமாக பலத்துடன் திமுகவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை பிடிக்கும். இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்களுக்கு மத்தியில் தவெகவுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் 4 முனை போட்டி ஏற்பட்டால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக பாராவீல் நிறுவன கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தவெக இணையும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திரைமறைவு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தவெக இணையும்பட்சத்தில் அந்த கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.