உதவிப் பேராசிரியர்களின் நியமனத்தில் எதற்கு இத்தனை குளறுபடிகள்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகளை அரசு முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நடக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் கொஞ்சம் கூடக் குறையவில்லை என்பதற்கு மற்றொரு சான்றாக விளங்கும் இந்நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.

முதல் தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்றவருக்கு கட்டுரை பகுதியில் 50-க்கு வெறும் 0 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், அதிலும் பணி மூப்பில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு ஒற்றை இலக்கத்திலேயே மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட முடிவின்படி பணி நியமன ஆணை பெற்ற தேர்வர்களில் ஒருவருக்கு, 0–ஆக இருந்த பணி அனுபவ மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு 15 ஆக உயர்ந்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை நாம் எளிதில் கடந்துவிட முடியாது. அதிகாரிகளின் பணத்தாசைக்காக, பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயாக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கவும் முடியாது.

எனவே, நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகளை அரசு முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், ஏற்கனவே அறிவித்த 2,708 உதவிப் பேராசியர் பணியிடங்களுடன் மேலும் காலியாக உள்ள 1,292 பணியிடங்களையும் சேர்த்து, 4,000 காலிப் பணியிடங்களாக உயர்த்தி அறிவிக்க வேண்டுமெனவும் முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com