மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி

அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பா.ம.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று நடைபெற இருந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்த முயன்ற பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பா.ம.க. போராட்டத்துக்கு அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி பி.வேல்முருகன், "பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ?" என கேள்வி எழுப்பிய அவர், போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று கூறுங்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கு ஏற்புடையது அல்ல. வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்" என அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com