

சென்னை,
சென்னை திருவொற்றியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, வட மாகாணங்களில் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிடில் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக எச்சரித்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுவதால் தான் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுகிறது. பல இடங்களில் தடுப்பூசி இல்லை என்ற நிலை ஏற்படுகிறது.
வருகிற ஜூலை மாதத்தில் 71 லட்சம் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட உள்ளன. ஊரடங்கு தற்போது சிறு சிறு தளர்வுகளுடன் நீடித்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் 3ம் அலை வந்தாலும் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது. அதனால், மக்கள் 3ம் அலை குறித்து அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.