அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏன் இவ்வளவு காலதாமதம்? - ஐகோர்ட்டு கேள்வி

கோப்புப்படம்
போலீசார் நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் பணிகள் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில், அறப்போர் இயக்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனங்கள், அப்போதையை மாநகராட்சி உயர் அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, வழக்கின் புலன் விசாரணையை விரைவாக முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாததால், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது. இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல், "டெண்டர் முறைகேடு தொடர்பாக கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பணியாற்றிய காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதி அளித்து கடந்த மாதம் 30-ந்தேதி அராசணை பிறப்பித்துள்ளது. மேலும் 2 உயர் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதியை பெற வேண்டியுள்ளது'' என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதி, "அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது? நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் போலீசார் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கோர்ட்டு விதிக்கும் காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.






