

சென்னை,
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், அங்கிருந்து பெரம்பூரில் உள்ள தனது கட்சி அலுவலகம் நோக்கி பிரசார வாகனத்தில் சென்றார். அப்போது, வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரசாரம் செய்தார்.
விஜய்யை பார்ப்பதற்கும், அவரது பேச்சை கேட்கவும் ஆண்களும், பெண்களும் என பெருங்கூட்டம் நின்றது. சிலர் சாலை தடுப்புகளை தாண்டி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் பிரசார வாகனம் மக்கள் கூட்டத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளிநிறுத்தப்பட்டது. இளைஞர்களின் எழுச்சிக்கு மத்தியில் விஜய் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் நடந்த பிரசாரத்தின்போது தேர்தல் விதிகளை மீறியதாக த.வெ.க. தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 5 ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த உறுதிமொழியை மீறி 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்களை திரட்டியதாகவும், பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் பாதையை மறைத்ததாகவும் தேர்தல்நிலை கண்காணிப்பு குழு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் நடந்தது என்ன..? என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார். மேலும் எந்த சூழலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என டி.ஜி.பி.யிடமும் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் போலீசார் பாரபட்சமாக நடப்பதாகவும் நேற்று த.வெ.க. தரப்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டநிலையில் இந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.