கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? - மத்திய மந்திரி விளக்கம்

அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
சென்னை,
கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன்? என்பது குறித்து மத்திய கலாசாரத் துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடையே அவர் இது தொடர்பாக பேசுகையில், "கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் தெரியவேண்டி உள்ளன. இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும். கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்து அளவீடுகளிலும் முழுமை பெறும் போது உரிய அங்கீகாரம் கிடைக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், அயோத்தி ஆய்வை மட்டும் மத்திய அரசு உடனே அங்கீகரித்தது ஏன்? எப்படி? என்றும், தமிழகத்தின் தொன்மையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தொடர்ந்து மறுக்கிறதே என்றும் வரலாற்றுப் பேராசிரியர்களும், தமிழக ஆய்வாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அயோத்தியில் அறிவியல்பூர்வமான எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதை நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.