மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன்? - மு.க.ஸ்டாலின் குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்

அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸை ஒரு பலிகடாவாக மாற்ற முயற்சி நடப்பதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பலிகடாவாக மாற்ற முயற்சி

தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு் முன்னாள் முதல்-அமைச்சர் (மு.க.ஸ்டாலின்) அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது.

தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் ஒரு வசதியான பலிகடாவாக மாற்ற முயற்சி.

குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது ஏன்?

ஊழல், வசூல் மற்றும் ஆணவத்தின் அடையாளமாக மாறிய ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்தனர். அதன் விளைவு அனைவருக்கும் தெரியும். 59 இடங்களுக்கு சுருங்கியதுடன், முதல்-அமைச்சர் தாமும் தோல்வியடைந்தார்;

15 அமைச்சர்கள் மக்களால் நிராகரிக்க பட்டனர் .

ஆனால் குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது.

ஏன்?

திசைதிருப்பும் அரசியல் ஏன்?

ஏனெனில், தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நின்றது.

மேலும், பாஜக ஆதரவுடன் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மக்களின் தீர்ப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் அரசியல் சில காலம் உதவலாம்.

ஆனால் உண்மையை மறைக்க முடியாது.

அண்ணன் அவர்களே, சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com