

சென்னை,
கொளத்தூர், சத்யா நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் இவரது மனைவி முத்துமாரியம்மாள் (வயது38) இருவரும் கடந்த வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்க ளுக்கு குழந்தை இல்லை.கணவன்-மனைவி இருவரும் கொளத்தூரில் உள்ள ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சரண்ராஜ் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் நேற்று இரவு கணவர் வேலைக்கு செல்லாததை முத்துமாரியம்மாள் கண்டித்தார். இதில் கணவன்-மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சரண்ராஜ் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் முத்து மாரியம்மாளின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்து மாரியம்மாள் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து சரண்ராஜை கைது செய்தனர். முத்து மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட முத்துமாரியம்மாளின் முதல் கணவர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவர் சரண்ராஜை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் முத்து மாரியம்மாள் கொலை செய்யப்பட்டு உள்ளார். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சரண்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.