வனத்துறையினர் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை... வீடியோ வைரல்

சாலையில் ஓடிய காட்டு யானை திடீரென ஆவேசம் அடைந்து வனத்துறையினர் வாகனத்தை தாக்கியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஓவேலி சரகத்தில் காட்டு யானைகள் வனத்திலிருந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைகிறது. இதனால் வனத்துறையினர் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் இரவில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்துள்ளது அறிந்த வனத்துறையினர் வாகனத்தில் சென்று விரட்டினர். அப்போது சாலையில் ஓடியவாறு சென்ற காட்டு யானை திடீரென ஆவேசம் அடைந்து திரும்பி வந்து வனத்துறையினர் வாகனத்தை தாக்கியது. இதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் பேனட் சேதமடைந்தது.
இதைத் தொடர்ந்து வன ஊழியர்கள் சத்தம் எழுப்பியதால் காட்டு யானை அங்கிருந்து வேகமாக சென்றது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினர் தரப்பில் கேட்டபோது, வன ஊழியர்கள் யாரும் காயம் அடையவில்லை. இது கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என தெரிவித்தனர்.






