ஒன்றுபடுமா அ.தி.மு.க. அணிகள்..? - எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதாவின் உதவியாளர் பரபரப்பு கடிதம்


ஒன்றுபடுமா அ.தி.மு.க. அணிகள்..? - எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதாவின் உதவியாளர் பரபரப்பு கடிதம்
x

கழகத்திலிருந்து பிரிந்து சென்ற தொண்டர்களை சேர்த்துக் கொண்டால், வெற்றி எளிதாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன் சங்கரலிங்கம் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் நம்பிக்கையை பெற்று பயணித்த அம்மாவின் தொண்டன், இன்று உங்கள் தொண்டன், மனம் திறந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த கடிதம் உணர்ச்சி, அன்பு மற்றும் நம்பிக்கையை முழுமையாக பிரதிபலிக்கும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டலில், மக்கள் நலனுக்காக நாம் கடந்து வந்த சோதனைகளும், வெற்றிகளும் நம் மனங்களில் புதைந்து கிடக்கின்றன. அதிலும் புரட்சித்தலைவரின் வழியில் புரட்சித்தலைவி அவர்கள் அடுத்தடுத்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வென்று சாதனையை நிகழ்த்தியதையும் நாம் அருகில் இருந்து பார்த்திருக்கிறோம். அவர் எதிர்த்து வெற்றி பெற்றது, அனைத்து வல்லமைகளையும் தெரிந்து செயல்படுத்தக்கூடியவர் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்தும் இருக்கிறோம்.

புரட்சித்தலைவி அவர்கள் பெங்களூர் சிறைச்சாலையில் இருந்த போது, அந்த சாலையின் தரையில் நீண்ட நாட்களாக அமர்ந்து காத்திருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பாசம் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். அந்த சிறைச்சாலையின் காவலர்கள் "இப்படி ஒரு பாசமுள்ள தொண்டர்களை நாங்கள் இதுவரை சந்தித்ததில்லை" என்று சொன்னவற்றையும் நாம் கேட்டிருக்கிறோம். நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப உறுப்பினர்கள், எங்கள் உடம்பில் ஓடுவது கழகத்தின் ரத்தம் என்றும் பெருமைப்பட சொல்லிக் கொண்டிருக்கிறோம். "உடன்பிறப்பு" என்ற மந்திர வார்த்தையால் கட்டுண்டு கிடக்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக தாங்கள் சிறப்பாக செயலாற்றி வருகிறீர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நான்தான் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். நாங்களும் மனப்பூர்வமாக உங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கழகம் வெற்றி பெற்று, நீங்கள் தான் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனுடைய அவா! நீங்கள் புரட்சித்தலைவருடைய பொற்கால ஆட்சியை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வழங்க வேண்டும் என்பதே எங்களைப் போன்ற தொண்டனின் லட்சியம்.

"இன்றைய சூழ்நிலையில், கழகத்திலிருந்து பிரிந்து சென்ற தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டால், வெற்றி எளிதாகும்", இதை மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் இதை உணர்ந்திருப்பதினால் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொறுப்பில் உள்ளவர்கள் தனக்கு நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டு, வெளியில் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒரே நோக்குடன் செயல்பட்டால் வெற்றி உறுதி. அந்த வெற்றியை நீங்கள் ருசிக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற கடைக்கோடி தொண்டனுடைய வேண்டுதல்.

நாங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வெற்றியை விரும்புகிறோம். உங்களுடைய வெற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி. அது எங்களுடைய வெற்றி! நீங்கள் முதல்-அமைச்சராக பதவி ஏற்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை தொடர வேண்டும்!

நாங்கள் சொல்வதெல்லாம் உங்கள் நலனுக்காக மட்டுமே! நான் நேற்றல்ல, இன்றல்ல, நாளையும் கழகத்திற்கான நல்லவற்றை சொல்லிக் கொண்டிருப்பேன். கழகத்திற்கு நல்லதைச் செய்யும் எந்தக் கருத்தாக இருந்தாலும் புரட்சித்தலைவிக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது கடமை! அதை நான் சரிவரச் செய்ததால் தான் புரட்சித்தலைவி அவர்களோடு என்னால் இவ்வளவு நாட்கள் பயணிக்க முடிந்தது என்பது உங்களைப் போன்ற உண்மை விசுவாசிகளுக்குத் தெரியும். புரட்சித்தலைவி அவர்களுடன் பயணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, அவருடைய நம்பிக்கையைப் பெறுவது எவ்வளவு சிரமம் என்பதும் உங்களுக்குப் புரியும். அன்றிருந்த அதே மனப்பான்மையோடு இன்றும் தங்களுக்கு எனக்கு தெரிந்தவற்றை சொல்லவே விழைகிறேன்.

நாங்கள் உங்கள் தொண்டர்கள், துணை நிற்பவர்கள், முழு ஆதரவாளர்கள். உங்கள் வெற்றி நிச்சயம். மக்களுக்கான ஆட்சியை கழகம் தர வேண்டும். புரட்சித்தலைவி அவர்களின் கொள்கையும், புரட்சித்தலைவருடைய எண்ணமும் அதுவே!

"பழனி வாழ் சுவாமியின்" பித்தனான நான், இந்த பழனிச்சாமியின் ஆட்சி மலர வேண்டும் என்ற ஆசையில் எழுதுகிறேன். தவறு இருந்தால் மன்னித்து, உணவில் இருக்கும் கல்லை தூக்கி எறிந்துவிட்டு, உணவை உண்பது போல நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். எனது நம்பிக்கை, உறுதி, அன்பு எப்போதும் உங்கள் அருகிலிருக்கும்..!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story