பேருந்து கட்டணம் உயர்வா..? - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்த அட்டவணை தயாராகிவிட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணம் உயர்வா..? - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
Published on

சென்னை,

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படி தான் பர்மிட் வழங்கப்படும்.

கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.

தமிழக பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்று வரை கடந்த ஓராண்டில்,112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன.

அதற்கான நிதியை தமிழக முதல்-அமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com