நாளை பேருந்துகள் ஓடுமா..? போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை

இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
நாளை பேருந்துகள் ஓடுமா..? போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன.

இதனையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓய்வுபெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில், அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச கோரிக்கைகளாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நிலவுகிறது.

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்கு எவ்வித இடையூறும் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முன்னதாக தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை அடுத்து ஆலோசனை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com