

தென்காசி,
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து செந்தட்டியாபுரம் புதூர் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் பரமன். இவருடைய மனைவி குருவம்மாள் (55 வயது). கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெயில் சுட்டெரித்ததால், வீட்டில் இருந்த குருவம்மாள் குளிர்பானம் என நினைத்து, எலுமிச்சை செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) தவறுதலாக குடித்து விட்டார். பின்னர் தூங்க சென்ற அவர் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
நீண்ட நேரமாகியும் குருவம்மாள் வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது குருவம்மாள் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று குருவம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.