மாடு கிணற்றில் விழாமல் தடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

மாடு கிணற்றுக்குள் தவறி விழுந்து விடுமோ என அஞ்சிய பெண் அதனை தடுப்பதற்காக வேகமாக ஓடினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கிணற்றுக்குள் மாடு விழுவதை தடுக்க ஓடிய பெண் கால் தவறி அதே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போளூர் தாலுகா சந்தவாசலை அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (40 வயது). நேற்று காலையில் வேண்டா, அவர்களது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு கிணறு பக்கம் சென்றது. கிணற்றுக்குள் தவறி விழுந்து விடுமோ என அஞ்சிய அவர் அதனை தடுப்பதற்காக வேகமாக ஓடினார்.

அப்போது நிலை தடுமாறி அதே கிணற்றில் விழுந்தார். அந்த கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையில், மண் தரையில் விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com