

திருப்பூர்,
பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து பருத்திக்கான இறக்குமதி வரி 11 சதவீதத்தை கடந்த 1-ந் தேதி முதல் வருகிற அக்டோபர் 30-ந் தேதி வரை தற்காலிக விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்தது. இதன்காரணமாக பஞ்சு விலை குறைந்ததால் நூல் விலை குறையத் தொடங்கின.
கடந்த 1-ந் தேதி நூல் விலை அனைத்து ரகத்துக்கும் கிலோவுக்கு ரூ.10 குறைத்து நூற்பாலைகள் அறிவித்தன. பஞ்சு விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நூல் விலை மேலும் குறையும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்தனர். அதன்படி 356 கிலோ கொண்ட 1 கேண்டி பஞ்சு விலை கடந்த 15 நாட்களில் ரூ.71 ஆயிரத்தில் இருந்து ரூ.66 ஆயிரமாக குறைந்துள்ளது.
இதனால் நூல் விலை நேற்று மேலும் கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. அதன்படி நூல் விலை (வரி நீங்கலாக) ‘செமி கோம்டு’ ரக நூல் 10-ம் நம்பர் ரூ.273, 16-ம் நம்பர் ரூ.275, 20-ம் நம்பர் ரூ.278, 25-ம் நம்பர் ரூ.283, 30-ம் நம்பர் ரூ.288, 34-ம் நம்பர் ரூ.296, 40-ம் நம்பர் ரூ.314-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் 'கோம்டு' ரக நூல். 20-ம் நம்பர் ரூ.288, 25-ம் நம்பர் ரூ.293, 30-ம் நம்பர் ரூ.298, 34-ம் நம்பர் ரூ.306, 40-ம் நம்பர் ரூ.324-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பஞ்சு விலை குறைந்து வருவதால் நூல் விலையும் குறைந்து வருவது பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. இந்த மாதம் 2-வது முறையாக கிலோவுக்கு ரூ.10 நூல் விலை குறைந்துள்ளது. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.