குடிநீர் பிடிப்பதில் மாமியாருடன் வாக்குவாதம்:இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலைதிருமணமான ஒரு ஆண்டில் சோகம்

குடிநீர் பிடிப்பதில் மாமியாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடிநீர் பிடிப்பதில் மாமியாருடன் வாக்குவாதம்:இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலைதிருமணமான ஒரு ஆண்டில் சோகம்
Published on

ராமநத்தம், 

கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அனுஷா (வயது 19). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், வீட்டில் உள்ள குடிநீர் குழாயில் யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என்பதில் அனுஷாவுக்கும், அவரது மாமியார் ராஜகுமாரிக்கும் (57) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, ராஜகுமாரி வேலைக்கு சென்று விட்டார். வயலுக்கு குளிக்க சென்ற கோவிந்தராஜ் வீட்டுக்கு வந்தார். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை.

தூக்கில் தொங்கினார்

இதனால் சந்தேகமடைந்த அவர், கடப்பாறையை கொண்டு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அவரது மனைவி அனுஷா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியான அவர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அனுஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

திருமணமான ஒரு ஆண்டில், புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com