வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு

கோப்புப்படம்
கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது. இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் (18 வயது) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார்.
இந்த நிலையில் சாமி தரிசனம் முடித்து விட்டு மலையில் இருந்து இறங்கும்போது, ஏழாவது மலையில் இருந்து புவனேஷ்வரன் கால் தவறி சுமார் 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






