நள்ளிரவில் நடுரோட்டில் வாலிபர்களை கட்டியணைத்து இளம்பெண்கள் முத்தமழை - திருப்பூரில் பரபரப்பு

வேலை விஷயமாக திருப்பூருக்கு இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்களும், இளம்பெண்களும் நள்ளிரவில் நடந்து சென்றனர். அப்போது திடீரென ஒரு இளம்பெண் சத்தமாய் ‘ஏய்... ஓடாத...ஒரு நிமிஷம் நில்லு.. ஒரு முத்தம் தாரேன்டா வாங்கிக்கோ!’ என்று தன்னுடன் வந்த வாலிபரை கட்டி அணைத்து முத்தமழை பொழிந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் அவரை அந்த இளம்பெண் விடவில்லை. விரட்டி, விரட்டி அவரை மடக்கி பிடித்து காதல் வசனம் பேசி மயக்கினார். இதேபோல் இன்னொரு இளம்பெண்ணும், வாலிபரை நெருங்கி வந்தார். நள்ளிரவில் நடுரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. அந்த காட்சியை சிலர் நேரில் பார்த்த போதிலும், கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த அத்துமீறலில் ஈடுபட்டது காதல்ஜோடியா? அல்லது அழகிகளின் அட்டூழியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வேலை விஷயமாக திருப்பூருக்கு படையெடுத்து வரும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் கூட்டம் ஒன்று பணம் பறிக்கும் நோக்கத்தில் இரவு நேரங்களில் சுற்றி வருவதாக புகார் கூறப்படுகிறது. விபசார அழகிகள் சிலர் நள்ளிரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் டிப்டாப் உடை, மேக்அப்புடன் வலம் வந்து இளைஞர்களை தங்களது வலையில் சிக்க வைக்கின்றனர்.
ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், சுடிதார் என விதவிதமான உடையுடன் காட்சியளிக்கும் இவர்கள் பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள சாலைகளில் ஆங்காங்கே நிற்கின்றனர். வேலைதேடிவரும் இளைஞர்களை குறி வைத்து நிற்கும் இவர்கள் புதியதாக வரும் இளைஞர்களை மடக்கி பேச்சுக்கொடுக்கின்றனர். மசியாத பட்சத்தில் கட்டியணைத்து முகமெங்கும் முத்தம் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்களை மடக்கி விடுதி அறைகளுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவிக்க செய்து கணிசமான பணத்தை கறந்துவிட்டு வெறுங்கையோடு அனுப்பி வைக்கின்றனர்.
இத்தகைய அழகிகளின் செயல்களுக்கு மயங்காத இளைஞர்கள் சிலர் அவர்களது பிடியிலிருந்து தப்பி ஓடுகின்றனர். அவர்களை அழகிகள் விரட்டியும் செல்கின்றனர். இவை திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதிகளில் அன்றாடம் அரங்கேறி கொண்டிருக்கும் அவலம் தான் என்றும், இது போலீஸ் துறைக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் உள்ளூர்வாசிகள் புலம்புகின்றனர்.






