

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்தனர். இந்த சிலைகள் கடந்த 2 நாட்களாக டிராக்டரில் எடுத்து செல்லப்பட்டு போலீசார் அறிவுறுத்திய இடங்களில் கரைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாக்கம் கிராமத்தில் இருந்து விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது. சிலையை பழவேற்காடு கடலில் கரைத்து விட்டு பாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 21) டிராக்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்தோஷ் தவறி கீழே விழுந்தார்.
அவர் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சந்தோஷ் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலைவனம் போலீசார் சந்தோஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.