

புதுடெல்லி,
டெல்லியில் மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீட்டை சென்னையில் இருந்து கொண்டு பேச முடியாது. டெல்லிக்கு நாங்கள் வருவது பிடிக்கவில்லையா? ஒவ்வொரு முறையும் மத்திய மந்திரிகள் சென்னை வந்து பேச முடியாத நிலையில், நாங்கள் டெல்லி சென்று பேசுகிறோம்.
அமித்ஷா உடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை, என்டிஏ கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். திமுகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்தும் பேசினேன். எங்கள் கூட்டணி பலமான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு, அதிமுக தான் தலைமை தாங்கும்.
நாங்கள் டெல்லிக்கு வந்தாலே முதல்-அமைச்சர் பயப்படுகிறார். 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. தவறு செய்ததால்தான் டெல்லியை கண்டு திமுக பயப்படுகிறது. பீகார் போன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். டெல்லி, தமிழ்நாடு என பேசி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
எங்கள் கூட்டணி முழுமையடைந்துவிட்டது. சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டுவரும் எண்ணமில்லை. திமுகவிற்கு ஒரே மாற்று அதிமுக தலைமையிலான கூட்டணிதான். திமுக என்கிற துரியோதணக் கூட்டணியை வீழ்த்தக்கூடிய பஞ்ச பாண்டவர் கூட்டணி நாங்கள் என்றார்.