எல்லையில் மீண்டும் பதற்றம்: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி - 3 பாக். வீரர்கள் பலியானதாக தகவல்

எல்லையில் மீண்டும் பதற்றம்: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி - 3 பாக். வீரர்கள் பலியானதாக தகவல்

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் அந்நாட்டின் 3 வீரர்கள் பலியாகினர். இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
Published on

ஜம்மு,

பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர், ஒரு சிறுமி உள்பட 3 பேர் இறந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தானின் ரவலாகோட் பகுதியில் உள்ள 7 ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டன. அங்கு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என இந்திய தரப்பில் கூறப்பட்டது.

இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு, பீரங்கி தாக்குதலை நடத்தியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஜோரி, பூஞ்ச் பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.

இதனிடையே இந்தியா நடத்திய தாக்குதலில் தங்கள் தரப்பில் 3 வீரர்கள் இறந்து விட்டதாகவும், பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருவதாகவும் அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் தெரிவித்தார்.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com