கவுந்தப்பாடி அருகே பயங்கரம்: வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் அடித்துக்கொலை

கவுந்தப்பாடி அருகே வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்கள். இதுதொடர்பாக உடன் வேல பார்த்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Published on

கவுந்தப்பாடி,

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் அதே பகுதியில் விசைத்தறிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இந்த விசைத்தறி கூடத்தில் பீகார் மாநிலம் நக்வான் மாவட்டம் கயா என்ற ஊரைச் சேர்ந்த லால்லன்பிரசாத் மகன் நவீன்குமார் (வயது 25), இமான் கஞ்சியை சேர்ந்த சுசில் பிரசாத் மகன் சுகேந்திரகுமாரவர்மா (28) மற்றும் ரவீந்திரகுமார், சவுராப் ரஞ்சன் ஆகியோர் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வந்தார்கள்.

இதில் சவுராப் ரஞ்சன் தனது மனைவியுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நவீன்குமார், சுகேந்திரகுமார் வர்மா, ரவீந்திரகுமார் ஆகிய 3 பேரும் விசைத்தறி கூடத்தில் உள்ள அறையிலேயே தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ரமேஷ் தன்னுடைய விசைத்தறிக்கூடத்துக்கு சென்றார். அப்போது அறைக்குள் நவீன்குமாரும், சுகேந்திரகுமாரும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்கள். அவர்களை யாரோ ஆயுதத்தால் தலையில் தாக்கி கொல செய்திருப்பது தெரியவந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனே கவுந்தப்பாடி போலீஸ் நிலயத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசைத்தறிக்கூடத்துக்கு விரைந்து வந்து கொலையாகி கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

மேலும் ஈரோட்டில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து பதிவாகியிருந்த ரேகைகளை பதிவுசெய்தனர். மோப்பநாய் வைதேகியும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த விசைத்தறி கூடத்துக்குள் சுற்றிச்சுற்றி ஓடியபடி பின்னர் நின்று விட்டது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொலையான நவீன்குமார், சுகேந்திரகுமார் வர்மா ஆகியோருடன் ஒன்றாக தங்கியிருந்த ரவீந்திரகுமார் தலைமறைவாகியிருந்தது தெரிந்தது. மேலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து கஞ்சா, மது குடிப்பது, விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. மேலும் அவர்கள் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

அதுபோல் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அதில் ஆத்திரமடைந்த ரவீந்திரகுமார் இரும்பு கம்பியால் நவீன்குமாரையும், சுகேந்திரகுமார் வர்மாவையும் அடித்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

அதைத்தொடந்து கவுந்தப்பாடி முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த ரவீந்திரகுமாரை பிடித்தார்கள். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்த வடமாநில வாலிபர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கவுந்தப்பாடியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com