திருப்பரங்குன்றம்,
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன்கள் பாண்டி (வயது 33), சம்பத் (30). பாண்டி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பத் டிரைவர் வேலை செய்து வந்தார்.
பாண்டி, சம்பத் ஆகிய இருவரும் தனது தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பாண்டியின் 3 வயது குழந்தை வீட்டுக்குள் சிறுநீர் கழித்து விட்டதாக கூறப்படுகிறது. அதில் சம்பத் ஆத்திரமடைந்து அண்ணன் பாண்டியை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. அதில் பாண்டி, சம்பத் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாண்டி, தம்பி மீது ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சம்பத் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அரிவாளோடு வந்த பாண்டி தம்பியின் கழுத்தை அறுத்ததோடு நெற்றியில் அரிவாளால் வெட்டியுள்ளார். அதில் சம்பத் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானார்.
தம்பியை கொடூரமாக கொன்ற அவர் நேராக திருநகர் போலீசில் சரணடைந்தார்.
போலீசார் சம்பத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பாண்டியை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.