

வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. அதேபோல இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதும் நடக்கிறது. இதை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகளும், கடலோர காவல் குழும போலீசாரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் போலீசார் ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் தம்பிகோட்டை சுந்தரம் காலனியை சேர்ந்த பாலமுருகன்(வயது 32) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் சாக்குப்பையில் 2 கிலோ வீதம் 17 பொட்டலங்கள் என 34 கிலோ கஞ்சாவை கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்து இருந்ததும், அதை இலங்கைக்கு படகில் கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் பாலமுருகனை கைது செய்து 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக படகுக்கு காத்திருந்தபோது பாலமுருகன் பிடிபட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3 லட்சம் என்றும் போலீசார் கூறினர்.
கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.