

அன்னவாசல்,
அன்னவாசல் அடுத்துள்ள பரம்பூர், தெற்கு வெள்ளாற்று பகுதியில் நேற்று சேரனூர் பகுதி பொதுமக்கள் மணல் திருட்டில் ஈடுபட்ட 10 மாட்டு வண்டிகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் விடுவிக்கப்பட்டன. மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் தெற்கு வெள்ளாற்று பகுதி மணல் படுகைகளை ஆய்வு செய்து, இதுவரை திருடப்பட்ட மணல் அளவை கணக்கீடு செய்ய வேண்டும். தடையை மீறி மணல் திருடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். மணல் திருட்டை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.