காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் ஒன்றியம், மாணிக்கனூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இலவச ஆங்கில வழி முன்பருவ கல்வியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அமீகா அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு இவவச ஆங்கில வழி முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது.
சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அறிவு, மொழி, உடல், சமூகம், மன எழுச்சி வளர்ச்சி ஆகியவற்றை தூண்டும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, மாதம் ஒரு தலைப்பு வீதம் கலந்துரையாடல், கதை சொல்லுதல், திட்டமிட்ட விளையாட்டு ஆகிய செயல்பாடுகள், அங்கன்வாடி பணியாளர்களால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த கல்வி
தற்போது, அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து அமீகா அறக்கட்டளை சார்பாக வழங்கியுள்ள கல்வி உபகரணங்களை வைத்தும் ஆசிரியர்களை நியமித்தும், குழந்தைகளுக்கு கல்வி அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம பகுதி குழந்தைகள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமீகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிராமமூர்ததி, அறங்காவலர் தர்மராஜன், தாசில்தார் ஜெய்சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், வருவாய் ஆய்வாளர் ஜெயப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் ஜாய்சுகந்தி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.