

பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள வண்டாரி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 40). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவரும், அவரது கடை அருகிலேயே டீக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்குள் தொழில் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று பழனிவேல் தனது டீக்கடையில் இருந்தபோது, செல்வம் மற்றும் அதே ஊரை சேர்ந்த கோடீஸ்வரன், முத்துக்காளை, ஆதி, சுரேஷ், ரமேஷ், மாரியம்மாள், சந்தானம், அன்னலட்சுமி, மற்றொரு சுரேஷ் ஆகிய 10 பேர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் பழனிவேலை ஆபாசமாக பேசி தகராறு செய்தனர். மேலும் அவர்கள் கடையை சூறையாடினர்.
பின்னர் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள், அந்த கடையில் இருந்த கொதிக்கும் பாலை எடுத்து பழனிவேல் மற்றும் தகராறை தடுக்க வந்த அவரது உறவினர்களான மகாலட்சுமி, மல்லிகா, வேல்முருகன், கலாராணி, வளர்மதி ஆகியோர் மீது ஊற்றினர். இதில் அவர்கள் 6 பேரும் காயமடைந்தனர். மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
பின்னர் காயமடைந்த பழனிவேல் உள்பட 6 பேரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து பழனிவேல் கொடுத்த புகாரின்பேரில் செல்வம் உள்பட 10 பேர் மீது சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.