வானத்தை நோக்கி துப்பாக்கியால் 9 முறை சுட்ட தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து உடனடியாக விடுவிப்பு

அரியலூரில் நள்ளிரவில் தேர்தல் பார்வையாளர் வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வானத்தை நோக்கி துப்பாக்கியால் 9 முறை சுட்ட தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து உடனடியாக விடுவிப்பு
Published on

அரியலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவிற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல வட மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களது பணிகளை அந்தந்த தொகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளராக (போலீஸ்) அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹேமன்த்கல்சன் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் வந்தார். அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அவர் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வந்தார். மேலும் வெளியில் சென்றும் தேர்தல் பணிகளை கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெளியில் சென்ற பின்னர் மாலையில் ஹேமன்த்கல்சன் சுற்றுலா மாளிகைக்கு திரும்பினார். இரவில் அறையில் தங்கியிருந்த அவர் திடீரென நள்ளிரவு 1 மணிக்கு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அரியலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் மணிபாலனிடம் பேசினார். அப்போது அவர் வைத்திருந்த நீள துப்பாக்கி பற்றி ஹேமன்த்கல்சன் கேட்டார். மேலும் துப்பாக்கியை தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் துப்பாக்கியில் தோட்டாக்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுபார்ப்போம் என போலீஸ்காரரிடம் ஹேமன்த்கல்சன் கூறியுள்ளார். இதற்கு உடனே மணிபாலன் மறுப்பு தெரிவித்தார். மேலும் துப்பாக்கியால் சுட தனக்கு அதிகாரம் கிடையாது என்றார். அப்போது மணிபாலனிடமிருந்த துப்பாக்கியை ஹேமன்த்கல்சன் வலுக்கட்டாயமாக பிடுங்கி வானத்தை நோக்கி 9 முறை சுட்டார். இதில் துப்பாக்கியில் இருந்த 10 தோட்டாக்களில் 9 தோட்டாக்கள் வானத்தை நோக்கி பாய்ந்து சென்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீஸ்காரர் மணிபாலன் அதிர்ச்சியடைந்தார். துப்பாக்கியில் இருந்து வெளிவந்த சத்தத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தவர்களும், அப்பகுதியில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா மாளிகை வளாகத்தில் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்ட நிலை இருந்தது.

இது குறித்து மணிபாலன் தனது உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் ஹேமன்த்கல்சன் எந்த பதற்றமும் இல்லாமல் நேராக தனது அறைக்கு சென்று படுத்து தூங்கினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுற்றுலா மாளிகைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் மணிபாலனிடம் விசாரித்தனர். மேலும் தேர்தல் பார்வையாளர் ஹேமன்த்கல்சனிடம் அவரது அறைக்கே சென்று விசாரித்தனர். இந்த விசாரணை நேற்று காலை 10.30 மணி வரை நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் ஹேமன்த்கல்சன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது உண்மை என தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தகவல் தெரிவித்தார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். இதைதொடர்ந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்து அவரை உடனடியாக விடுவிக்குமாறு தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி உடனடியாக அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த உத்தரவையடுத்து ஹேமன்த்கல்சன் உடனடியாக தனது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு செல்ல தயாராகினார். சுற்றுலா மாளிகையில் இருந்து தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு காலை 11 மணி அளவில் அவர் வெளியேறினார். தேர்தல் பார்வையாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com