நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும் காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது - தேவேகவுடா திட்டவட்டம்

நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும் என்றும், காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது எனவும் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் 2018-ல் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 14 மாதங்கள் ஆட்சி புரிந்த இந்த அரசு, 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து கவிழ்ந்தது. கூட்டணி அரசு கவிழ சித்தராமையா தான் காரணம் என்று தேவேகவுடா மற்றும் குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அரசு கவிழ தேவேகவுடா குடும்பத்தினரே காரணம் என்று சித்தராமையாவும் குற்றம் சுமத்தினார். இரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டினர். காங்கிரசுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன் என்று தேவேகவுடா கூறினார்.

இதற்கிடையே, பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் உள்ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஒருவேளை இடைத்தேர்தலில் பா.ஜனதா குறைந்த இடங்களில் வெற்றி பெற்றால், எடியூரப்பா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்றும், காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சி மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் பெங்களூருவில் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமிக்கு, தொடக்கம் முதல் ஆட்சி நிறைவடையும் வரை தொல்லை கொடுத்தனர். இப்போதும் குமாரசாமிக்கு இம்சை கொடுப்பது குறையவில்லை. எங்களுக்கு தற்போது புரிதல் வந்துவிட்டது. காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டுமென்றால் நாங்களும், சித்தராமையாவும் ஒன்றுசேர வேண்டும் அல்லவா?.

ஆளும் பா.ஜனதா அரசு எப்படி கவிழும்? முதல்-மந்திரி எடியூரப்பா கையில் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி அரசில் நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும். இடைத்தேர்தலுக்கு பிறகு காங்கிரசுடன் கூட்டணி வைத்து மீண்டும் தவறு செய்ய மாட்டேன். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com