

சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குற்றவியல் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த புதிய விதிகள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை நேரில் ஆஜர்படுத்தினால் மட்டுமே, அவர்களை சிறையில் அடைப்பதற்கு (ரிமாண்ட்) உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே சிறையில் உள்ளவர்களை காணொலி காட்சி மூலம் காவல் நீட்டிப்பை மேற்கொள்ளலாம்.
மூன்றாம் பாலினத்தவர்
குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் மூன்றாம் பாலினத்தவர்களை, மாவட்ட மருத்துவ அதிகாரி அந்தஸ்துக்கு குறையாத மருத்துவ அதிகாரிகளை கொண்டு, மருத்துவ பரிசோதனை செய்து, அந்த அறிக்கையின் அடிப்படையில், ஆண் தன்மை அதிகமாக இருந்தால் ஆண்கள் சிறையிலும், பெண் தன்மை அதிகமாக இருந்தால் பெண்கள் சிறையிலும் அடைக்கலாம்.
அதேநேரம் சிறையில் உள்ள மற்ற கைதிகளால் 3-ம் பாலினத்தவர்களுக்கு எந்த விதமான அசவுகரியங்களும் ஏற்படாதபடி, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். மருத்துவ அறிக்கை கிடைக்கும் வரை, அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள சிறை கைதிகளுக்கான சிறப்பு வார்டில் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் பற்றி....
மேலும், 6 வயதுக்கும் குறைந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்காக ஆஜர்படுத்தப்பட்டால், குழந்தையை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், காவலில் அடைத்து பிறப்பிக்கும் உத்தரவில் குழந்தையைப் பற்றியும் நீதிபதிகள் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.