வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தக்கோரி ஜனாதிபதிக்கு மனு - புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தக்கோரி ஜனாதிபதிக்கு மனு அனுப்பி உள்ளதாக புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
Published on

வேலூர்,

புதியநீதிக்கட்சி தலைவரும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணிகட்சி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் நேற்று வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வேலூர் தொகுதியில் வருமானவரித்துறை நடவடிக்கையால் பிரசாரம் முடிந்த நிலையில் கடந்த 16-ந் தேதி திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 18-ந் தேதி தேர்தல் நடத்தவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தோம். ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்பிறகு மாநில தேர்தல் ஆணையத்திடமும், தமிழக கவர்னரிடமும் மனுகொடுத்தோம். கடந்த 4 நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று தலைமை தேர்தல் ஆணையத்திடமும், வேலூரில் தேர்தல் நடத்தவேண்டிய நிலைமை குறித்து தெரிவித்தோம். அப்போது தேர்தல் நடத்த வேண்டுமென்றால் 2 அல்லது 3 மாதங்களாகும் என்றனர். உடனடியாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

நேற்றுமுன்தினம் ஜனாதிபதிக்கு மனு அனுப்பி உள்ளோம். வேலூர் தொகுதிக்கு உடனடியாக தேர்தல் அறிவிக்கவேண்டும். தி.மு.க.வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவரை நாங்கள் தோற்கடிப்போம்.

தபால் ஓட்டுகள் போடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது, ஜனநாயக நாட்டில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை வேலூர் தொகுதி மக்களுக்கு இல்லாமல் போய்விடும்.

இன்று (நேற்று) முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடஇருக்கிறேன். முதல் கட்டமாக நிர்வாகிகளை சந்தித்து பேசஇருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் மத்தியமந்திரி என்.டி.சண்முகம், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் மூர்த்தி, த.மா.கா. மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com