வாஷிங்டன்,
தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள். அதனை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் சிலர் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் உள்ள ரியோ கிராண்டே ஆற்றை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக ரப்பர் படகில் பயணம் செய்தனர்.
படகில், 10 மாத பச்சிளம் ஆண் குழந்தை மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் இருந்தனர். ஆற்றில் நீரோட்டம் அதிவேகமாக இருந்ததால் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எல்லையோர பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் உள்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே சமயம் 10 மாத பச்சிளம் குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தது. விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த குழந்தையின் உடல் கரை ஒதுங்கியது.
மேலும் இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.