விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின அணிவகுப்பு பேரணி தடையை மீறி நடத்தியதால் பரபரப்பு

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தடையை மீறி பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

குத்தாலம்,

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கட்சியின் முன்னாள் நாகை மாவட்ட அமைப்பாளர் மா.ஈழவளவன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை காவிரி நகரில் இருந்து புறப்பட்ட பேரணி பூக்கடைத்தெரு, காமராஜர் சாலை, கண்ணாரத்தெரு வழியாக சென்று மயிலாடுதுறை சின்னக்கடை வீதியை அடைந்தது.

பேரணியில் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை அரசு கைவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை வளங்களை சூறையாடும் வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போலீசார் குவிப்பு

இதில் கட்சியின் மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் உமாகாந்தன், ஒன்றிய பொறுப்பாளர் பாரதிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மயிலாடுதுறையில் பேரணி, ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின அணிவகுப்பு பேரணி நடைபெற்றதால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேரணியையொட்டி மயிலாடுதுறை நகர் பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com