

பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட எருமாடு அருகே நேதாஜி நகர், பனஞ்சிரா, மராடி, கோட்டூர், புளியங்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்து மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை எருமாடு கிராம நிர்வாக அலுவலக முன்பகுதியில் இருந்து கோட்டூர் வழியாக கேரள மாநிலம் வடுவன்சால் வரை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்த வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் எருமாடு கோட்டூர் சாலையை உடனே சீரமைக்க கோரி நேற்று கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிவேல் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.