மடிகேரியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை அதிர்ச்சியில் கணவரும் உயிரை மாய்த்துக்கொண்டார்

மடிகேரியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
Published on

குடகு,

துமகூருவை சேர்ந்தவர் சேத்தன். இவருடைய மனைவி வாணி. இந்த தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. சேத்தன் குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் மடிகேரியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சேத்தன் நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னா மாலையில் பள்ளியில் இருந்து தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரம் தட்டியும் வாணி கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சேத்தன், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது வாணி, தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து சேத்தன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இதையடுத்து அவர், துமகூருவில் உள்ள தனது தந்தைக்கு போன் செய்து விஷயத்தை கூறினார். அப்போது, மனைவி இல்லாத உலகில் நானும் வாழ மாட்டேன் என கூறிய சேத்தன், தானும் தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்தார்.

இதனை கேட்டு சேத்தனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உடனடியாக மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சேத்தனை காப்பாற்றும்படி கூறினார்.

அதன்படி மடிகேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனாலும் போலீசார் செல்வதற்குள் சேத்தன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து போலீசார் தற்கொலை செய்துகொண்ட சேத்தன் மற்றும் வாணியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து சேத்தனும் தனது உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

வாணி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com