தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேனி காதல் ஜோடி கொலை வழக்கில், குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Published on

புதுடெல்லி,

தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும், தேனி மாவட்டத்தின் காட்டூரை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள். பின்னர் காதல் ஜோடி சுருளி அருவி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இதில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டு இருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருநாக்கன்முத்தன்பட்டியை சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு திவாகருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து திவாகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டும், தேனி முதன்மை அமர்வு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திவாகர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, திவாகரின் மரண தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மேல்முறையீட்டு மனு மீது பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com