ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை இன்று தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை நேற்று செலுத்தப்பட்டது.
Published on

திருச்சி,

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீது இருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானார்.

ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் இடையே சம்பந்தமும், உறவும், மங்கல பொருட்கள் வழங்குவதும் நெடுங்காலமாக இருந்து வந்தது.

எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்துக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்கல பொருட்கள் வழங்குவது நடந்து வருகிறது.

வஸ்திர மரியாதை

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை நேற்று செலுத்தப்பட்டது.

இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், அவை பக்தர்கள் பார்வைக்காக கருடமண்டபத்தில் வைக்கப்பட்டன.

இன்று தேரோட்டம்

இதைத்தொடர்ந்து அவை மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோ, ஸ்தானிகம் ரமேஷ்பட்டர் உள்ளிட்ட குழுவினர் வஸ்திர மரியாதையை அளித்தனர்.

அதை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) சித்திரை தேரோட்டத்தின் போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை நம்பெருமாள் அணிந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com