திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மருமகள் சாமி தரிசனம் செய்தார்.
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். ஏனென்றால் இந்த மலை சிவனாக போற்றப்படுகிறது. மேலும் புண்ணியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். எனவே ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலை நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும்.

மேலும் சித்ரா பவுர்ணமி, மகா தீபத்திருநாள் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வாரவிடுமுறை நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதன்படி, நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மருமகள் ராதா கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், கோ பூஜை மற்றும் சாமிக்கு நடந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மருமகள் வருகையையொட்டி போலீசார் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மாதத்துக்கான பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணி வரை பவுர்ணமி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com