

திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உடனிருந்தார். அதனை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்று கொண்டு, உலக சமாதானத்தை வலியுறுத்தி வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார்.
பின்னர் 15 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 38 போலீசார் மற்றும் 240 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
இதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 பேருக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியமாக தலா ரூ.50 ஆயிரமும், 28 பேருக்கு தலா ரூ.3 ஆயிரத்து 350 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரமும், 3 பேருக்கு ரூ.5 ஆயிரத்து 18 மதிப்பிலான இஸ்திரி பெட்டியும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 8 பேருக்கு ரூ.92 ஆயிரத்து 500 மதிப்பிலான உதவி உபகரணங்களும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனுடைய 4 குழந்தைகளுக்கு ரூ.22 ஆயிரத்து 600 மதிப்பிலான உதவி உபகரணங்களையும், வேளாண்மைத்துறை சார்பில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 6 பேருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பேருக்கு கஜா புயல் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.16 ஆயிரத்து 750 மதிப்பிலான ஈடு பொருட்களும், வருவாய்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.ஆயிரம் வீதம் முதியோர் உதவித்தொகையும் என மொத்தம் 88 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 778 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலைநிகழ்ச்சிகள்
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வ நாயகி, வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, உதவி கலெக்டர்கள் முருகதாஸ் (திருவாரூர்), புண்ணியகோட்டி (மன்னார்குடி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூஷ்ணகுமார், இணை இயக்குனர் (சுகாதாரம்) உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.