மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது

புதுவையில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி நகர பகுதியில் செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் விற்கப்படும் கடைகள் உள்ள பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் இதுகுறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மேற்பார்வையில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

போலீசாரிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவரை சோதனை போட்டதில் 10 கிராம் வீதம் 5 கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் லாஸ்பேட்டை முத்துலிங்கம்பேட் பகுதியை சேர்ந்த சேகர்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் பின்னணியில் ஒரு கும்பலே செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி நாவற்குளம் முருகன் கோவில் வீதியை சேர்ந்த பிரவீன்(22), சென்னை நீலாங்கரையை சேர்ந்த லோகநாதன்(45) ஆகியோர் சேகரின் கூட்டாளிகள் என்பது அம்பலமானது.

இதைத்தொடர்ந்து அவர்களது வீடுகளுக்கு சென்று போலீசார் சோதனை போட்டனர். அப்போது அந்த பகுதியில் மறைத்து வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

சென்னையில் இருந்து புதுவைக்கு கஞ்சாவை கடத்தி வந்து சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சேகர், பிரவீன், லோகநாதன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com