

மேச்சேரி,
மேச்சேரி அருகே உள்ள கரும்பு சாலியூர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 59), தொழிலாளி. இவர் நேற்று மல்லிகுந்தம் கிழக்கு காட்டுவளவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அழகப்பனிடம் பணம் பறிக்க முயன்றனர். மேலும் பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதை கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து மேச்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.
3 பேர் கைது
போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் மல்லிகுந்தம் அருகே கண்ணாகுட்டை களச்சி மரத்துக்காடு பகுதியை சேர்ந்த சாமிதுரை (23), மல்லிகுந்தம் அருவம் பள்ளம் பகுதியை சேர்ந்த சரவணன் (26), கருமலைக்கூடல் ராமன் நகர் இரட்டை புளியமரம் பகுதியை சேர்ந்த கோபி (30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.