திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் கோபிநாத் ஆகியோர் களமிறங்கினர். இதில் கோபிநாத் 1(5) ரன்னிலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 27(20) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கவுசிக் காந்தி மற்றும் சசிதேவ் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடி காட்டிய சசிதேவ் 41(27) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஹரிஷ்குமார், கவுசிக் காந்தி உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் தங்களது அரைசதங்களை பதிவு செய்து அசத்தினர்.
முடிவில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் 53(23) ரன்களுடனும், கவுசிக் காந்தி 50(48)ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது. காஞ்சி வீரன்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கவுதம் தாமரை கண்ணன் 2 விக்கெட்டுகளும், தீபன் லிங்கேஷ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.