வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் தனது மனைவி மஞ்சுளா மற்றும் 2 குழந்தைகளுடன் நாவற்குள பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேசும், அவரது மனைவி மஞ்சுளாவும் வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது குழந்தைகள் இருவரும் மாலையில் பள்ளி முடிந்ததும் டியூசனுக்கு சென்று விட்டனர். வீட்டில் சுரேசின் தாய் கல்யாணி (71) மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அந்த சமயத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கல்யாணியின் வலது காதை பிடித்து இழுத்துள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த போது அவரது காதுகளில் அணிந்திருந்த 1 பவுன் கம்மல்கள் மற்றும் அவர் வைத்திருந்த 5 பவுன் சங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டனர்.

இதனிடையே வேலைக்கு சென்றிருந்த சுரேஷ், வீடு திரும்பினார். அங்கு தனது தாய் கல்யாணி மயக்கமடைந்த நிலையில் இருந்ததால் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com