பாமக தலைவர் அன்புமணிதான்; தலைமை தேர்தல் ஆணையம்

பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணிதான்; தலைமை தேர்தல் ஆணையம்
Published on

டெல்லி,

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பாமக தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இதனால், பாமக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவை அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு சொந்தமானது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இது ராமதாஸ் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பாக அமைந்தது.

இதனிடையே, பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு செய்தது.

இந்நிலையில், இந்த சீராய்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாமகவில் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பு தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளோம் என்று டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் உட்கட்சி பிரச்சினை எழுவதற்கு முன்பு தரப்படும் ஆவணங்கல் அடிப்படையில் அதை அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தலைமை தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் ராமதாசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பாமக வழக்கில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு தேர்தல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com