மணக்குள விநாயகர் கோவில் யானை வேளாண் அறிவியல் நிலையத்துக்கு இடமாற்றம்

புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை வேளாண் அறிவியல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு 15 நாட்கள் வைத்து யானையை பராமரிக்க திட்டமிட்டுள்ளனர்.
Published on

புதுச்சேரி,

புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான லட்சுமி என்ற பெண் யானை சமீபத்தில் கோவை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு சென்று வந்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் புதுவையில் கோவில்கள் எதுவும் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் கோவில் யானை லட்சுமி வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வழக்கமாக இருக்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் யானை லட்சுமியை வனப்பகுதி போன்று இருக்கும் குருமாம்பேட் வேளாண் அறிவியல் நிலையத்தில் வைத்து 15 நாட்கள் பராமரிக்க வனத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த யானையை அங்கு அழைத்துச் செல்ல யானைப்பாகன்கள் தயாரானார்கள். அப்போது பா.ஜ.க., இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் யானையை இடமாற்றம் செய்வது தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை மணக்குள விநாயகர் கோவில் யானையை வேளாண் அறிவியல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து மீண்டும் பா.ஜ.க., இந்து முன்னணியினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பெரியகடை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து யானை கால்நடையாக காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு வைத்து யானையை 15 நாட்கள் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com