வாக்குச்சீட்டில் குளறுபடி: உப்புக்கோட்டையில் விறுவிறுப்பாக நடந்த மறு வாக்குப்பதிவு

உப்புக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
Published on

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் கடந்த 30-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில், 8-வது வார்டு பகுதிக்கு உப்புக்கோட்டை பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் ராசு என்ற வேட்பாளரின் பெயரோ, சின்னமோ வாக்குச்சீட்டில் இல்லை. வாக்குச்சீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வாக்குச்சீட்டில் பெயர், சின்னம் இல்லாதது குறித்தும், மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தியும் வேட்பாளர் ராசு, மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டார். இதையடுத்து மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையே தேர்தல் நடத்த வேண்டாம் என்று ராசு கலெக்டரிடம் நேற்று முன்தினம் கோரிக்கை வைத்தார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கலெக்டர், அந்த வேட்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கனவே அறிவித்தபடி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து மறு வாக்குப்பதிவு நடத்துவதற்காக வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று உப்புக்கோட்டை 8-வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். முன்னதாக மறு வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடி மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com