வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
Published on

ராயக்கோட்டை,

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டு (வயது 35). டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக பாலக்கோடு நோக்கி, எம்.சாண்ட் மணல் ஏற்றி கொண்டு, டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்தார்.

ராயக்கோட்டை அடுத்த உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாண்டு, படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் சாவு

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளி பகுதியில், நேற்று இரவு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வாலிபர் மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com